குடியாத்தம், மே 4: குடியாத்தம் அருகே ராணுவ வீரர்களின் வீடுகள் உட்பட அடுத்தடுத்து 4 வீடுகளில் 20 சவரன், ₹1.50 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். குடியாத்தம் அடுத்த ரயில்வே நிலையம் பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வருபவர் உயர்ந்தவன். இவரது சகோதரர் வீரன் மற்றும் மதியழகன் ஆகிய 3 பேரும் தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் ராணுவ வீரர்கள். இந்நிலையில் உயர்ந்தவன் மற்றும் வீரன் ஆகியோர் வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றனர். மதியழகனும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில், மதியழகன் நேற்று வீடு திரும்பியபோது 3 பேரின் வீடுகளில் முன்பக்க கேட் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே, டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர். இதில் மதியழகன் வீட்டில் பிரோவில் வைத்திருந்த 3 சவரன், ₹25 ஆயிரம் மற்றும் உயர்ந்தவன் வீட்டில் ஒரு சவரன், ₹10 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் வீரன் வீட்டில் 12 சவரன், ₹1 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

மேலும், குடியிருப்புக்கு அருகே வசித்துவரும் மகேஸ்வரி என்பவரது வீட்டிலும் 4 சவரன் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடிசென்றது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மர்மநபர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை, பணம் திருடிச்சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்