லக்னோ: வரும் 18ம் தேதி உத்தரபிரதேச முதல்வராக மீண்டும் யோகி ஆதித்ய நாத் பதவியேற்க உள்ளதாகவும், புதிய அமைச்சர்கள் குறித்து ஆலோசிக்க இன்று அவர் டெல்லி செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 255 தொகுதிகளில் வென்று 41.29 சதவீத வாக்குகளைப் பெற்று பாஜக ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது. அக்கட்சி மீண்டும் வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அமைச்சர்களுடன் நேற்று முன்தினம் லக்னோவில் ஆலோசனை நடத்தினார். ெதாடர்ந்து அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலிடம், தனது ராஜினாமா கடிதத்தை யோகி ஆதித்யநாத் அளித்தார். இதற்கிடையில், உத்தரபிரதேசத்தில் பாஜக மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பதால், பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய அரசு அமைந்த பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகள் நடைபெறும். புதிய அரசின் பதவியேற்பு விழா, ஹோலி பண்டிகைக்குப் பிறகு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது வரும் 18ம் தேதி யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பதவியேற்பார். அன்றைய தினமே அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக உத்தரபிரதேசத்தின் தற்காலிக முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்று டெல்லிக்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா ஆகியோரை சந்திக்கிறார். அப்போது புதிய அமைச்சரவையில் யார் யாரை சேர்ப்பது என்பது உள்ளிட்ட விஷயங்கள் பேசப்படும் என்று கூறப்படுகிறது. காரணம், முந்தைய யோகி அமைச்சரவையில் துணை முதல்வர் உள்பட 11 அமைச்சர்கள் தேர்தலில் தோல்வியடைந்ததால் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கான சூழல் அமைந்துள்ளது….