சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு பயிற்சிக்கு நவம்பர் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-2024 ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது. அந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு பயிற்சிக்கு தங்களை பதிவு செய்து கொள்ள, கடந்த 2023 ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 21ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்சமயம் தனித் தேர்வர்களின் நலன் கருதி அறிவியல் பாட செய்முறைத் தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய நவம்பர் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப் படிவம் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, 10ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று பதிவுக் கட்டணம் ரூ.125 செலுத்தி, தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.