சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று அமைச்சர் வெளியிடுகிறார். தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிடுகிறார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. மேற்கண்ட வகுப்புகளுக்கான தேர்வு தேதிகள், பாட வாரியாக மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களும் அப்போது வெளியாகும். நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகள் குறுக்கிடாத வகையில் தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் அமைச்சர் தெரிவித்து இருந்தார். அதன்படி மாணவர்களின் மற்ற தேர்வுகள் பாதிக்கப்படாத வகையிலும், நுழைவுத் தேர்வில் பங்கேற்க இருக்கும் மாணவ மாணவியர் அவற்றில் பங்கேற்கும் வகையிலும் தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.