திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கரிடம் தையல் தொழில் தெரிந்த மாற்றுத்திறனாளி பயனாளிகள், தையல் தொழில் செய்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள இலவச தையல் மிஷின் வழங்குமாறு கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட கலெக்டர், தொழிற்சாலைகளின் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து தையல் தொழில் தெரிந்த மாற்றுத்திறனாளி பயனாகளுக்கு தையல் மிஷின் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரனுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் தனியார் பையோ சயின்ஸ் நிறுவனத்தின் பொது நிறுவன சமூக பங்களிப்பு நிதியின் மூலம் 10 மாற்றத்தினாளி பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பிலான மின்சார தையல் இயந்திரங்களை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன் ஏற்பாடு செய்திருந்தார். இதனை தொடர்ந்து கலெக்டர் த.பிரபு சங்கர் அவர்களுக்கு நேற்று மின்சார தையல் இயந்திரங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், பொன்னேரி சப் கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், பயிற்சி உதவி கலெக்டர் ஆயுஷ் குப்தா, ச.சீனிவாசன், சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் கி.ரா.லேகா, சபரிநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.