10 புதிய மேம்பாலங்கள் கட்ட நிலம் கையகப்படுத்தும் பணியை வேகப்படுத்திய சிறப்பு அதிகாரிகள்: அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் பால பணிகளை முடிக்க தீவிரம்

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் புதிதாக கட்டப்படும் 10 மேம்பாலங்களுக்கான நிலங்களை கையப்படுத்தும் பணியை சிறப்பு அதிகாரிகள் வேகப்படுத்தியுள்ளனர். அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் பாலப் பணிகளை முடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் வாகனப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

இதற்கிடையே, சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் கூட விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமின்றி நகரின் முக்கிய இடங்களிலும் இன்னும் போக்குவரத்து நெரிசல் என்பது குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்புக்கு பிறகு வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எளிய வங்கி கடன் வசதி, கிரெடிட் கார்டு மூலம் கடன் தவணை செலுத்துதல் போன்றவை எளிமையாக்கப்பட்டு இருப்பதால் கார் பயன்பாடும் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் அதிகரித்து வரும் வாகனங்கள், மக்கள் தொகை நெருக்கம் போன்றவற்றால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர் கதையாக நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சாலைகளில் மேம்பாலங்களை கட்டினால் மட்டுமே ஓரளவு தீர்வு காண முடியும்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், சென்னையில் மேம்பாலம் கட்டும் பணிகளை தொடங்கியுள்ளது. அதன்படி, ெசன்னையில் புதிதாக 10 இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகரட்சிக்குட்பட்ட பல்வேறு மண்டலங்களில் நடைபெறும் பாலம் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்துமாறு சென்னை கலெக்டர் அலுவலகத்தை சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், பாலங்கள் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை சென்னை கலெக்டர் அலுவலக அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பல்வேறு இடங்களில் பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேநேரத்தில் சில இடங்களில் பாலம் கட்டுவதற்கு நிலத்தை கையகப்படுத்தவேண்டிய நிலை உள்ளது. அதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் வடபெரும்பாக்கம் பாலம் திட்டத்திற்கு 13,218 சதுர அடி பரப்பளவில் 14 தனியார் நிலங்களை கையகப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

இதற்கான நிர்வாக அனுமதி கடந்த மாதம் 12ம் தேதி வழங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதற்கான சிறப்பு அதிகாரியை சென்னை கலெக்டர் நியமித்துள்ளார். மேலும், மணலி மண்டலம் 17வது பிரிவில் உள்ள வடபெரும்பாக்கத்தில் புழல் உபரி நீர் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு 74 சதவீத திட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. இத்திட்டம் ரூ.22.4 கோடி மதிப்பீட்டில் 2018-19ம் ஆண்டில் சென்னை பெருநகர மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் எடுக்கப்பட்டிருக்கிறது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து 3 மாதங்களில் பாலம் பணிகள் முடிக்கப்படும். திட்டத்திற்காக 900 மிமீ விட்டம் கொண்ட வாட்டர்லைனை மாற்றும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் பாலம் அமைக்கும் பணியையும் விரிவுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கு நிலம் கையகப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ.176 கோடியிலிருந்து ரூ.195.19 கோடியாக திருத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு குறைந்தபட்சம் 1.17 லட்சம் சதுர அடி நிலம் தேவைப்படுகிறது. இதில் 30,784 சதுர அடி தனியாரிடம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. இதற்கும் நிலம் கையகப்படுத்தும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, வள்ளுவர் கோட்டம் அருகே நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் டெண்டர் கோரப்படும். வளசரவாக்கம் மண்டலத்தை பொறுத்தவரை 143 மற்றும் 144 பிரிவுகளில் உள்ள பூந்தமல்லி ஹை ரோடு மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் சின்ன நொளம்பூரில் கூவம் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட 47,318 சதுர அடி நிலம் கையகப்படுத்த வேண்டும். தண்டையார்பேட்டை மண்டலத்தில் பிரிவு-41 மணலி சாலையில் தற்போதுள்ள லெவல் கிராசிங் எண். 2பிக்கு பதிலாக மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

அங்கு சன்னதி முதல் குறுக்குத் தெருவில் பாலம் அமைக்க 16,479 சதுர அடி நிலம் தேவைப்படுகிறது. ஆலந்தூர் மண்டலம் ஜீவன் நகர் இரண்டாவது தெருவில் ஆதம்பாக்கம் ஏரியின் குறுக்கே பாலம் கட்ட மேடவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். சென்னை ஆஸ்பிரான் கார்டன் 2வது தெரு மற்றும் கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையை இணைக்கும் ஓட்டேரி நுல்லாவின் குறுக்கே உள்ள பாலம் புனரமைப்பு, தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகர் முதல் பிரதான சாலை வழியாக மேம்பாலம் மற்றும் வியாசர்பாடி அருகே கணேசபுரத்தில் இருக்கும் சுரங்கப்பாதையின் மேல் மேம்பாலம், தண்டையார்பேட்டை ஜீவா ரயில் நிலையம் மற்றும் திருவிக நகர் மேம்பாலம் ஆகிய அனைத்தும் 2024 செப்டம்பரில் முடிப்பதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை