கம்பம்: கம்பத்தை சேர்ந்த மூதாட்டி 108 வயதிலும் கல்வி கற்று வருகிறார். தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்தவர் கமலக்கன்னி (108). கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கம்பத்தில் இருந்து பிழைப்புக்காக, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் வண்டன்மேட்டில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றது கமலக்கன்னியின் குடும்பம். குடும்ப வறுமை காரணமாக 2ம் வகுப்போடு படிப்பை முடித்த கமலக்கன்னி, அதன்பின் தோட்ட வேலைக்கு சென்றுவிட்டார். படிப்பை பாதியில் விட்ட கமலக்கன்னி, நூறு வருடங்கள் கழித்து மீண்டும் படிக்க ஆசைப்பட்டார்.
கேரள அரசின் ‘சம்பூர்னா சாக்சரத வகுப்பு’ என்னும் முழு எழுத்தறிவு வகுப்பில் சேர்ந்த மூதாட்டி கமலக்கன்னி, மலையாளமும் தமிழும் எழுதக் கற்றுக் கொண்டார். எழுத்துத்தேர்வு முடிவில் கமலக்கன்னி 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றார். முதுமையான வயதிலும் ஆர்வமுடன் கல்வியறிவை பெறும் கமலக்கன்னிக்கு வண்டன்மேடு கிராம பஞ்சாயத்து சார்பில் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி கற்க வயது தடை இல்லை என்பதற்கு உதாரணமாக திகழும் கமலக்கன்னி மேற்கொண்டு படிக்கவும் ஊக்கப்படுத்தி உள்ளனர்.