சென்னை: தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதை தொடர்ந்து, 104 மருத்துவ சேவை மையத்தில், பிரத்யேக மையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. நீட் தேர்வுக்கு பயந்து, சேலத்தை சேர்ந்த தனுஷ், அரியலுாரை சேர்ந்த கனிமொழி ஆகியோரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். ஒருவருக்கு பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், மன ரீதியாக பாதிக்கப்படும்போது தான், தற்கொலை செய்து கொள்வதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதுபோன்றவர்களுக்கு தீர்வு காணும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறையின், 104 மருத்துவ சேவையில், மனநல ஆலோசனைகள், கொரோனா மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது: மன ரீதியாக பாதிக்கப்படுவோரின் மன திடத்தை அதிகரித்தால் அவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிடுவர். குறிப்பாக, வீட்டில் இருப்பவர்களிடமோ, நண்பர்களிடமோ மனம் விட்டு பேசும்போது, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதன்படியே, 104 மருத்துவ சேவையில், பிரத்யேக மையம் துவங்கப்பட உள்ளது. தற்கொலை எண்ணம் இருப்பவர்கள், 104 எண்ணை தொடர்பு கொள்ளும்போது, அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும். மேலும், அடிக்கடி அவர்களிடம் தொடர்பு கொண்டு நண்பர்களாக பேசி, இயல்பு நிலைக்கு அவர்கள் திரும்ப வழிவகை செய்யப்படும். இந்த மையத்தை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்….