காஞ்சிபுரம்: 77வது சுதந்திர தினவிழா சிறப்பு கிராமசபை கூட்டத்தில். கருப்படிதட்டடை ஊராட்சியை சேர்ந்த 100 வயது கடந்த மூதாட்டிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு, புதிய 100 ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவித்து ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து பெற்றனர். காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருப்படிதட்டடை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பொன்னா (எ) வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற 77வது சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர், கூட்டத்தில், கருப்படிதட்டடை ஊராட்சியில் உள்ள 100 வயதை கடந்த பார்வதி ஜெகநாதன், சரோஜா கன்னியப்பன் ஆகிய 2 மூதாட்டிகள் கலந்துகொண்டனர்.
மூதாட்டிகளுக்கு, ஊராட்சி மன்ற தலைவர் புத்தாடை வழங்கி சிறப்பு செய்து சால்வை, பூமாலை அணிவித்ததுடன் கவுரவிக்கும் வண்ணம் புதிய 100 ரூபாய் நோட்டுகள் கொண்ட மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்து பெற்றார். மேலும் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் நூற்றாண்டை கடந்து வாழும் மூதாட்டிகளுக்கு மலர் தூவி ஆசி பெற்றனர். ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊர் மக்களும் மூதாட்டிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதில், ஊராட்சி மன்ற துணை தலைவர் சத்யா, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், அரசு செவிலியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.