100 நாள் வேலை மீண்டும் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 100 நாள் வேலை மீண்டும் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அவளூர் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒவ்வொரு பயனாளிக்கும் 100 நாட்கள் பணி வழங்கி கடந்த காலங்களில் ஊராட்சி நல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, பணி நாட்கள் குறைந்துள்ள காரணங்களால் பல்வேறு கிராம ஊராட்சிகளில் பணி வழங்க இயலாத நிலை உள்ளது.

அவ்வகையில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அவளூர் கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் அதிகளவு பயனாளிகள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், தற்போது நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 பணியாளர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம 100 நாள் பயனாளிகள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, மீண்டும் அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் கோமளாவிடம், பேச்சுவார்த்தை நடத்தி பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மரக்கன்று திட்டங்களில் அதிகளவில் மக்கள் பயன்பெற வேண்டும் எனவும், அதற்குண்டான தொகையும் அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும் என்பதும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் எனக்கூறி, விரைவில் இத்திட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ளுங்கள் எனக்கூறினார். இருப்பினும், பொதுமக்கள் சமாதானம் அடையாமல் தங்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் கூறியதின் அடிப்படையில், விரைவில் அப்பகுதியில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அப்போது, பொதுமக்கள் வரும் திங்கள்கிழமை 100 நாள் வேலை வாய்ப்பு வழங்கவில்லை என்றால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை