திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம் விழா நேற்று நடைபெற்றது. பட்சி தீர்த்தம் என்றழைக்கப்படும் திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமாவாரத்தில் 1008 மகா சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேப்போல், இந்தாண்டு நேற்று கார்த்திகை மாதம் கடைசி சோமாவாரம் என்பதால் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் 1008 மகா சங்காபிஷேகம் விமரிசையாக நடந்தது.
இதனை முன்னிட்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தக்குளத்தில் பிறக்கின்ற சங்குகள் மற்றும் வலம்புரி, இடம்புரி சங்குகள் என மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 1008 சங்குகளில் புனிதநீர் ஊற்றப்பட்டு அந்த சங்குகள் மூலம் வேதகிரீஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது. இதனைக்காண பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து, வேதகிரீஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.