இந்த ரூ.200 கோடி நன்கொடையாளர்கள் வழங்கிய ரூ.104.84 கோடியை சேர்த்து மொத்தம் ரூ.304.84 கோடியில் தற்போது 197 கோயில்களில் பணிகள் நடந்து வருகின்றன. கிராமப்புற கோயில்களுக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கும் வழங்கப்பட்ட நிதி ரூ.1 லட்சம் என்பது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உதவிபெறும் கோயில்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1000 என்பது 1250 என உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் 2500 கோயில்களுக்கு ரூ.100 கோடி கூடுதலாக அரசு மானியம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஒருகால பூஜை கூட செய்ய நிதி வசதியில்லாத 12,959 கோயில்களுக்கு வழங்கப்பட்ட வைப்பு நிதி தலா ஒரு லட்சம் என்பதை ரூ.2 லட்சமாக உயர்த்தி ரூ.130 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் புதிதாக 2,000 கோயில்கள் ஒருகால பூஜை திட்டத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டு, தற்போது மொத்தம் 17,000 கோயில்கள் பயன்பெற்று வருகின்றன. இத்திட்டத்திற்காக மட்டும் அரசு ரூ.200 கோடி மானியமாக வழங்கியுள்ளது. இப்படி, கோயில் பணிகள் சிறப்பாக நடந்து இந்து சமய அறநிலையத் துறை புதிய பரிமாணம் அடைந்து வருவதைக் கண்டு பொதுமக்களும் பக்தர்களும் முதல்வரையும், தமிழ்நாடு அரசையும் வெகுவாகப் பாராட்டுகிறார்கள்.