சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தேசிய நலவாழ்வு மையத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதய நோய்களுக்கான சிகிச்சை குறித்து, இதய நோய் வல்லுனர்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. ஆய்வுக்குப் பிறகு நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் ஜனவரி முதல் 1,166 பேர் எச்1 என்1 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 வயதுக்குட்பட்ட 46 குழந்தைகளுக்கும், 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 60 குழந்தைகளுக்கும், 14 முதல் 60 வயதுடையவர்கள் 194 பேருக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட 71 பேருக்கும் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், புறநகர் மருத்துவமனைகள் என மொத்தம் உள்ள 11,333 மருத்துவமனைகளில் மருந்துகள் வழங்கப்படுகிறது. கூடுதலாக இன்று தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். சென்னையில் மட்டும் 100 முகாம் நடைபெறும். …