சின்னமனூர் : சின்னமனூர் நகர்ப் பகுதிகளில் பல கடைகளில் தொடர்ந்து நெகிழிகள் பதுக்கி வைக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவின் பேரில் போடி நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை மெயின் ரோடு, மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவு, தேரடி தெரு, சீப்பாலக்கோட்டை சாலை, பழைய பாளையம், நடுத்தெரு, சக்க மூக்கு கண்ணாடி முக்கு, முத்தலாபுரம் பிரிவு, முத்தாலம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி கமிஷனர் கோபிநாத் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
பெட்டிக் கடைகள், ஜவுளி கடைகள், ஹோட்டல்கள், மருந்து கடைகள், நகைக் கடை என பெட்டிக் கடைகள் முதல், வணிக வளாகங்களில் உள்ள கடைகள் வரை நெகிழிகள் பயன்படுத்தப்படுகிறதா என அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.இந்த சோதனைகளில் 100 கிலோவுக்கும் அதிகமாக நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நெகிழிகளை பதுக்கிவைத்து பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
நெகிழி பயன்பாட்டை தவிர்த்து மீண்டும் மஞ்சள் பைகள், துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும், வாடிக்கையாளர்களையும் பயன்படுத்தச் செய்ய வேண்டும் என அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கடைக்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிகள் சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தில் எரித்து அழிக்கப்பட்டது.