மயிலாடுதுறை : 100 அடி உயரமுள்ள மணிகூண்டுக்கு வெடிகுண்டு மிரட்டலால் மயிலாடுதுறையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.ஜெர்மனிக்கு எதிரான போரில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் நினைவாக மயிலாடுதுறை கடைவீதி மைய பகுதியில் 1943ம் ஆண்டு அப்துல்காதர் என்பவரால் மணிக்கூண்டு கட்டப்பட்டது. 100அடி உயரம் கொண்ட மணிக்கூண்டு மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மணி கூண்டுவிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று காலை 9.30 மணியளவில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு வந்த தகவலின் பேரில் போலீசார் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை மணிகூண்டு பகுதியில் மெட்டல் டிடக்டர் மூலம் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மோப்ப நாய் குகன் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டதால் மயிலாடுதுறை நகரில் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.