Monday, July 8, 2024
Home » 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்-சோளிங்கர் அருகே பரபரப்பு

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்-சோளிங்கர் அருகே பரபரப்பு

by kannappan

சோளிங்கர் :  சோளிங்கர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கல் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனை விதைகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கரிக்கல் மலைப்பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பணியில் ஈடுபட்டிருந்த ஜெயா(50) என்பவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஊராட்சி மன்ற தலைவரின் உதவியை உடன் வேலை செய்த தொழிலாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் நான் எதுவும் செய்ய முடியாது. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஜெயா உறவினர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்ற பணியாளர்களிடம் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா, 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் போது விபத்து ஏதும் ஏற்பட்டால் நாங்களே ( தொழிலாளர்கள்) பொறுப்பு  என எழுதி கொடுத்துவிட்டு பணிக்குச் செல்லுங்கள் என கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் சோளிங்கர் – அரக்கோணம் சாலையில் திடீர்  மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் மற்றும் பிடிஓ தனசேகர் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார். மேலும் 100 நாள் வேலை திட்டத்தின் போது விபத்து நேர்ந்தால் நாங்களே பொறுப்பேற்க வேண்டும் என எழுதி கொடுத்தால் தான் வேலை செய்ய வேண்டும் என கூறுகிறார். உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது எனக்கூறும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தனர். இதுகுறித்து மேலதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சோளிங்கர்- அரக்கோணம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

You may also like

Leave a Comment

20 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi