100 நாள் பணியின் போது அத்துமீறல் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்: இளைஞரை கைது செய்த போலீசார்

திருவள்ளூர், மே 4: 100 நாள் பணியின் போது அநாகரீகமாக நடந்து கொண்ட வாலிபரை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டும், சாலை மறியல் செய்தும் பெண்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட செல்லியம்மன் கோவில் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் பெண்களிடம் தகாத வார்த்தைகள் பேசி அநாகரீகமாக நடந்து கொண்டதுடன், ஆடைகளை அவிழ்த்து ஆபாச செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞரை கைது செய்ய வலியுறுத்தி புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல் துறையினரின் உத்திரவாதத்தை ஏற்காத பெண்கள், திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

விசாரணையில், பெண்களிடம் தகாத முறையில் பேசி நடந்து கொண்டவர், அதே கிராமத்தைச் சேர்ந்த ஸ்டிக்கர் பிரபா என்பது தெரியவந்தது. இதனையடுத்து கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தின் அருகே பதுங்கியிருந்த பிரபாவை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இது போன்று பல முறை தகாத செயல்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து பிரபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி