செங்கல்பட்டு: கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு கிடந்த சிங்கபெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலப்பணி மும்முரமாக நடந்து வருகிறது. சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி திமுக ஆட்சியில் துவங்கப்பட்டது. பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால், அதிமுக அரசு வேண்டுமென்றே, மேம்பால பணியை கிடப்பில் போட்டது. இதனால், தினமும் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இதுவரை பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். சிங்கபெருமாள் கோயில் ரயில்வே கேட்டை கடந்து, திருக்கச்சூர், ஆப்பூர், ஒரகடம், பெரும்புதூர், பாலூர் என பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் மிகவும் அவதியடைகின்றனர்.இந்த ரயில்வே கேட்டை கடந்து, விழுப்புரம், திருச்சி, தஞ்சை, மதுரை, திருநெல்வேலி என தென் மாவட்டங்களுக்கும் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு மின்சார ரயில்கள் தொடர்ந்து செல்வதால், இந்த ரயில்வே கேட்டை அடிக்கடி மூடப்படுகிறது. இதையொட்டி, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும், ரயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதையொட்டி, மேற்கண்ட பகுதியில் கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணியை மீண்டும் துவங்கி, விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சிங்கப்பெருமாள்கோயில் பகுதியில் கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணி ₹163 கோடியில் மீண்டும் துவங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி – சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையங்களுக்கு இடையே ₹138.27 கோடியிலும், வண்டலூர் – வாலாஜாபாத் இடையே ₹25.522 கோடியிலும் மேம்பால பணிகளை கடந்த ஒரு மாத்துக்கு முன், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து, மேம்பாலப்பணி மிகவும்மும்முரமாக நடக்கிறது….