சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் ஆவடி அரசு பொது மருத்துவமனையில் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை உச்ச நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, 10 மாவட்டங்களில் அதிகப்படியான பாதிப்பு இருந்து கொண்டிருக்கிறது. அந்த 10 மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டமும் ஒன்றாக உள்ளது. இந்த மாவட்டத்தில் தினந்தோறும் 1000 முதல் 1300 பேர் வரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா தொற்றுக்கு தீர்வு என்கிற வகையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தவணையாக 1 லட்சத்து 44 ஆயிரத்து, 58 பேருக்கும், 2வது தவணையாக 53 ஆயிரத்து 908 பேருக்கும் போடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 2 லட்சத்தை நெருங்கும் வகையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள பால்வளத்துறை அமைச்சர் நாசரின் வேண்டுகோளுக்கிணங்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இங்குள்ள 50 படுக்கைகளை தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் படுத்துகிற கோரிக்கையை ஏற்று உள்ளோம்,” இவ்வாறு அவர் கூறினார்….