10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு

 

திருவொற்றியூர், செப்.30: திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் என 10 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிக்குழு எழுத்தர்களாக சுமார் 41க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சென்னை மாநகராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள மையத்தில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் மாற்றம், புகைப்படம் மாற்றம், மற்றும் அடையாள அட்டை வழங்குதல் உள்பட தேர்தல் பணிகள் தொடர்பான அனைத்து ஆவணப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்வாகம், நிதி பிரிவிலிருந்து மாதம்தோறும் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக இந்த பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் தங்களுக்கு மாத ஊதியம் வழங்கக்கோரி பலமுறை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தில் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனாலும் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. தேர்தல் பிரிவில் அதிகப்படியாக பெண்கள் பணிபுரிவதால் மாத ஊதியம் கிடைக்காமல் குடும்பத்தின் அன்றாட செலவுகளுக்கு பணமின்றி, பிள்ளைகளின் கல்வி கட்டணம், வாடகை போன்றவர்களை செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இவர்களுக்கு வர வேண்டிய நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும். மாதந்தோறும் தவறாமல் தொகுப்பூதியத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அரவக்குறிச்சி விவசாயிகள் சேலம் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்திற்கு சுற்றுலா

உலக இருதய தினத்தை முன்னிட்டு தான்தோன்றிமலையில் இலவச ஆலோசனை முகாம்

101 டிகிரி சுட்டெரித்த வெயில்