பொன்னை, அக்.1: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் மணல் கடத்தி சென்ற திருவண்ணாமலையை சேர்ந்தவர் உட்பட 2 பேரை பொன்னை போலீசார் நேற்று கைது செய்தனர். வேலூர் மாவட்டம், பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணா மற்றும் போலீசார் நேற்று வள்ளிமலை அடுத்த சோமநாதபுரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், தார்பாய் ஷீட் கொண்டு மூடப்பட்ட நிலையில் 10 யூனிட் ஆற்று மணல் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், ஆந்திர மாநிலம், திருப்பதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான லாரியில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ஆற்று மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், லாரியுடன் 10 யூனிட் ஆற்று மணலை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து ஆற்று மணல் கடத்திய திருவண்ணாமலை மாவட்டம், மருத்துவம்பாடியை சேர்ந்த ஏசையா(48), விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை சேர்ந்த பார்த்திபன்(35) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.