சென்னை: சென்னையில் கடந்த இரு தினங்களாக 10 செ.மீ. அளவுக்கு மழை பெய்தும், வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதத்துடன் கூறினார். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி தலைமையில் கிராம சபைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அயப்பாக்கம் ஊராட்சியை விரைவில் சென்னை மாநகராட்சியோடு இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலங்களில் தொற்று ஏற்படாமல், 381 நடமாடும் மருத்துவ வாகனங்களும், அதுமட்டுமில்லாமல் மழை பெய்து வரும் இடங்களில், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில், சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது. கடந்த இரு தினங்களாக 10 செ.மீ. மழை பெய்தும் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை. மழைநீர் தேங்கியுள்ள ஒரு சில பகுதிகளில் மின் மோட்டார் மூலம் மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்பு இல்லாமலே எதிர்கட்சிகள், எதிரி கட்சிகளை போல் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டி வருகின்றன. சென்னை மாநகராட்சி சுமார் 330 ஆண்டு வரலாற்றில் இதுவரை 2,100 கிலோ மீட்டர்தான், மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஓராண்டில் 1553 கிலோ மீட்டர் மழை நீர் வடிகால்வாய் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்….