10 ஆண்டாக சிறையில் இருக்கும் கணவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் ஸ்ட்ரெச்சரில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த பெண்

கோவை: 10 ஆண்டாக சிறையில் இருக்கும் கணவருக்கு ஜாமீன் வழங்க கோரி ஸ்ட்ரெச்சரில் வந்து கலெக்டரிடம் பெண் மனு அளித்தார். கோவை கரும்புக்கடையை சேர்ந்தவர் பாத்திமா. உடல் நிலை பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது கணவர் சுலைமான் குண்டு வெடிப்பு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே கணவர் வழக்கில் எந்த விசாரணையும் நடத்தாமல், அவரை நெடுநாட்களாக சிறையில் வைத்திருப்பதாகவும், வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் அல்லது சுலைமானுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாத்திமா கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு ஸ்ட்ரெச்சரில் வந்து மனு அளித்தார்.இது குறித்து பாத்திமா கூறுகையில், ‘‘எனது கணவர் சுலைமான் மீது வழக்கு ப்பதிவு செய்யாமலேயே கடந்த பத்து வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அழைத்துச் செல்லப்பட்டவரை இதுவரை வெளியில் விடாமல், வழக்கும் நடத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளனர். நான் உடல் நிலை மோசமாகி படுத்த படுக்கையாக இருக்கிறேன். எனது கணவரை குறைந்தபட்சம் ஜாமீன் கொடுத்தாவது வெளியே அனுப்ப வேண்டும்’’ என்றார்.

 

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி