10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை சகோதரர்கள் உட்பட 3 பேர் போக்சோவில் கைது செங்கம் அருகே ஆடு மேய்க்க சென்ற

செங்கம், செப்.25: செங்கம் அருகே ஆடு மேய்க்க சென்ற 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகோதரர்கள் உட்பட 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிறுமி அதே பகுதியில் ஆடுகளை மேய்க்க சென்றார். அப்போது, அங்கு நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பவன்குமார்(31), அவரது அண்ணன் ராமஜெயம்(33) மற்றும் செல்வராஜ்(57) ஆகியோர் அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அவர்களிடம் தப்பித்து சென்று நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் கூறி கதறி அழுதார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். அதில், பவன்குமார், அவரது அண்ணன் ராமஜெயம் மற்றும் செல்வராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் லட்சுமி போக்சோ சட்டம் உட்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தார். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தார். ஆடு மேய்க்க சென்ற சிறுமியிடம் அண்ணன், தம்பி உட்பட 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு