பெரும்புதூர், மே 23: பெரும்புதூரில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தனியார் பள்ளி வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசு போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவின்பேரில், பெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வருடாந்திர பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் முகாம் பெரும்புதூர் அடுத்த வடமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு, பெரும்புதூர் கோட்டாட்சியர் சரவணகண்ணன் தலைமை வகித்தார். பெரும்புதூர் ஏஎஸ்பி உதயகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் குமரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெய்சங்கர், மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து, பெரும்புதூர் கோட்ட எல்லையில் உள்ள 25 தனியார் பள்ளியில் இயங்கி வரும் சுமார் 199 வாகனங்களின் பிரேக், முகப்பு விளக்கு, அவசரகால வழி, கண்காணிப்பு கேமரா, வேக கட்டுபாட்டு கருவிகள் குறித்து ஆய்வு செய்யபட்டது. இதில், சில குறைபாடுகள் கண்டறியப்பட்டு 16 வாகனங்களுக்கு தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்து, 183 வாகனங்கள் ஆய்வு கமிட்டியால் தேர்வு செய்யப்பட்டது. மேலும், ஓட்டுநர் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் பள்ளி குழந்தைகள் பாதுகாப்புக்காக பயணம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தபட்டது. மேலும், தீயணைப்பு துறை மற்றும் அவசரகால ஊர்தி 108 சார்பில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
பெரும்புதூரில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
previous post