பரமக்குடி: பொங்கல் பண்டிகைக்கு பின் போக்குவரத்து துறையில் காலியிடங்கள் நிரப்பப்படுமென அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: சென்னையில் மட்டும் 2,800 பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இயக்கப்பட உள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். மக்கள் பாதுகாப்பு, நீதித்துறையில் தமிழகம் முதல் இடத்தை வகிக்கிறது என ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவே கூறியுள்ளார்.தமிழகத்தில் நிர்வாகம் மிகச் சரியாக சென்று கொண்டிருக்கிறது, அதற்கு அதிகாரிகளும் முழு ஒத்துழைப்புடன் வேகமாக பணியாற்ற வேண்டும். பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு போக்குவரத்து துறையில் ஊழியர்கள் நிரப்பப்பட உள்ளனர். காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்….