Friday, July 5, 2024
Home » ஹீரோவே வில்லனானால்…

ஹீரோவே வில்லனானால்…

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் ‘‘பொதுவாக நமது உடலை எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பதுதான் நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கிய வேலையாகும். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியே ஒரு சிலருக்கு, ஒரு சில நேரங்களில் பிரச்னையாகிவிடலாம். இதையே ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் என்கிறோம். இது பற்றி எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆர்த்தரைட்டிஸ் என்று சொல்லப்படுவதால் எலும்பு தொடர்பான பிரச்னை என்றும் பலர் நினைத்துக் கொள்கிறார்கள்’’ என்கிறார் முடக்குவாத சிறப்பு மருத்துவரான பாலாஜி. ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் பற்றி தொடர்ந்து விளக்குகிறார்.‘‘நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தாலும், அதிகமானாலும் ஒரு சில நோய்கள் நமக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்த சக்தி உடலில் குறைந்தால், சில தொற்றுகள் ஏற்படும். இந்த ஆற்றல் கூடினால் அலர்ஜி வரும். நம்முடைய உடலில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இந்த சக்தியில் ஏதாவது பிரச்னை உண்டாகும்போதுதான் ஒருவருக்கு ருமட்டாய்டு ஆர்த்தரைட்டீஸ் ஏற்படுகிறது. நம்முடைய உடலில், பாதிப்புக்களை ஏற்படுத்துகிற வைரஸையோ, பாக்டீரியாவையோ தடுப்பதுதான் நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கிய வேலையாகும். அதற்குப் பதிலாக, ஒரு சில நேரங்களில் உடல் உறுப்புகளை நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கும். அதன் காரணமாக ஏற்படுகிற நோய்தான் ‘முடக்குவாத நோய்’ என மருத்துவ உலகில் குறிப்பிடப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் Rheumatoid arthritis என்று குறிப்பிடலாம்.முடக்குவாத நோய் குறித்து பொதுமக்களிடம் தவறான எண்ணம் ஒன்று நிலவி வருகிறது. அதாவது வாயு(Gas) அதிகம் உள்ள மட்டன், உருளைக்கிழங்கு முதலான உணவுப்பண்டங்களை அடிக்கடி சாப்பிடுவதால் வாதம் உண்டாகிறது என நினைக்கின்றனர். இவ்வாறு ஒரு சிலர் இந்நோய் பற்றி தவறான எண்ணம் கொண்டு உள்ளனர். ஆனால், உணவுப்பழக்கத்துக்கும் இந்த நோய்க்கும் தொடர்பு இல்லை. ஒருவருடைய நோய் எதிர்ப்பு ஆற்றலில் ஏதாவது பிரச்னை வந்தால்தான்(அதனுடைய வேலையைச் சரியாக செய்யாமல் இருத்தல்) இந்நோய் வரும். அடுத்ததாக, மரபணுக்கும், இந்நோய்க்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு, ‘ஆமாம்’ என்பதுதான் பதில். ஏனென்றால் மரபணுவும், வாத நோயும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. அதேவேளையில் குடும்பத்தில் யாருக்காவது இந்நோய் இருந்தால் எல்லோருக்கும் வர வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதே வேளையில், குடும்ப உறுப்பினர்களில் எவருக்கேனும் முடக்குவாதம் இருக்கும்பட்சத்தில் தங்களுடைய வாரிசுகளும் என்றாவது ஒருநாள் இந்நோயால் பாதிக்கப்படலாம் என்ற விழிப்புணர்வு இருக்க வேண்டும். தங்களுடைய மகனுக்கோ, மகளுக்கோ மூட்டு இணைப்புகளில் வலி காணப்பட்டால் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. சற்றும் தாமதிக்காமல் முடக்குவாத மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். இந்நோய் ஒருவருக்கு வருவதைத் தடுக்க முடியாது. அதேவேளையில் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் தகுந்த சிகிச்சை அளிக்கலாம். ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு இந்த நோய் தொற்றாது. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், Reproductive Age Group காலமான 20 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் ஆகியோருக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் ஹார்மோன் இந்நோயில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதேவேளையில் குழந்தைகளுக்கும், முதுமைப் பருவத்தினருக்கும் முடக்குவாதம் வராது என சொல்ல முடியாது. பச்சிளம் குழந்தை முதல் 70-80 வயது வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் வரலாம். ஆண்களைவிட பெண்கள்தான் இந்நோயால் அதிகளவில் பாதிப்புக் குள்ளாகின்றனர். ஏனெனில், இவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் ஏராளமாக சுரக்கும். முடக்குவாதத்திற்கான அறிகுறிகள் என்று பார்க்கும்போது, மூட்டு இணைப்பு தொடர்பான அறிகுறிகள்தான்(Joint Related Symptoms) முக்கியமானவையாக கருதப்படுகின்றன. எந்தவித காரணமும் இல்லாமல் மூட்டுக்களில் குறைந்தபட்சம் 6 வாரங்களுக்கு மேல் வலி நீடிப்பது பொதுவான அறிகுறியாக கொள்ளப்படும். இது மாதிரியான நேரத்தில் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.இவை தவிர பெரிய மூட்டுக்களான முட்டி, தோள் மற்றும் கை, கால்கள் ஆகிய சின்ன மூட்டுக்களில் வலி இருத்தல், வலியோடு சேர்ந்து வீக்கம் காணப்படல், காலை நேரத்தில் படுக்கையில் இருந்து எழும்போது கை, கால்களில் பிடிப்பு 30 நிமிடங்களுக்கு மேல் காணப்படல்(Morning Stiffness), அளவுக்கு மீறிய சோர்வு போன்றவை இந்நோய்க்கான முக்கிய அறிகுறிகளாகும். நோய் எதிர்ப்பு சக்தியில்தான் பிரச்னை என்பது நோயாளிகளுக்குத் தெரிய வேண்டும். ஏனென்றால் நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படுகிற பிரச்னையால் தலைமுடி தொடங்கி கால் நகம் வரையுள்ள அனைத்து உறுப்புகளும் பாதிப்பு அடையும். ;இந்த நோயைக் கண்டுபிடிப்பதற்கும், சிகிச்சைக்கும் ருமட்டாலஜிஸ்ட்டைத்தான் அணுக வேண்டும். அவரால்தான் இந்நோயைக் கண்டுபிடிக்க முடியும். மேலே சொன்ன அறிகுறிகள் ஒருவருடைய உடலில் தென்பட்டால், முடக்குவாத மருத்துவரைப் பார்க்க வேண்டும். எதிர்பாராதவிதமாக அடிபட்டு வலி வந்தால் ஆர்த்தோ டாக்டரைப் பார்க்கலாம். அவருக்குப் பதிலாக கார்டியாலஜிஸ்ட்டைப் பார்க்கக் கூடாது. பெரும்பாலானோர் பார்க்க வேண்டிய டாக்டரைத் தவிர்த்து, வேறோர் டாக்டரைப் பார்க்கின்றனர். இவ்வாறு நடந்துகொள்வது நகை வாங்க, புடவை கடைக்குச் செல்வதற்கு ஒப்பாகும். ருமட்டாய்டு நோயைக் கண்டறிய பலவிதமான பரிசோதனைகள் செய்யப்படும். முதலில் ரத்தப்பரிசோதனை செய்வோம். இதை Auto Anti-Body-ல் பார்ப்போம். ருமட்டாய்டு ஃபேக்டர்ஸ், ANTI-CCP என்பது இதற்கு சரியான உதாரணம் பரிசோதனையின்போது, மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், பிற உறுப்புக்களையும், எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ. மற்றும் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலம் சோதனை செய்துகொள்வது நல்லது. நோயின் ஆரம்ப நிலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனும் முற்றிய நிலையில் எக்ஸ்-ரேயும் தேவைப்படும். இந்த நோய்க்கு மாத்திரைகள், வலி நிவாரணி கொடுத்து சிகிச்சை தரப்படும். பயலாஜிக்கல் என்ற நவீன சிகிச்சை முறையும் உள்ளது. இவை ஊசி வடிவில் உள்ளன. பவர்ஃபுல் என்பதால் நல்ல பலன் கிடைக்கிறது. ஆனால், விலை அதிகம். டிரெடிஷனல் மருந்து கொடுத்தால் ஜாயின்ட்ஸ் செயல் இழக்கும் அபாயம் உள்ளது. அந்நிலைக்குப் போகும் முன் நவீன சிகிச்சை; எடுப்பது நல்லது. முடக்குவாதம் என்பது வாழ்நாள் நோய், மாத்திரைகள் மற்றும் பயலாஜிக்ஸ் இருந்தும் இவை அதிக; விலை என்பதால் நோயாளிகள் தொடர்ந்து சிக்கிச்சை எடுப்பது இல்லை. இன்ஷுரன்ஸ் வசதி இந்நோய்க்கு வந்தால் பலர் பயன் அடைவார்கள்’’ என்கிறார்.தொகுப்பு: விஜயகுமார்

You may also like

Leave a Comment

eleven + 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi