Thursday, September 19, 2024
Home » ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

by Karthik Yash

சென்னை, செப்.19: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெபுனுல் ஆசாத் (33). இவர் கடந்த 5 மாதங்களாக சென்னை மண்ணடி தங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்து, பாரிமுனையில் உள்ள செல்போன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். ஜெபுனுல் ஆசாத் கடந்த 14ம் தேதி தனது நண்பர் முகமது ஜப்ரானிடம் ரூ.6 லட்சம் கடன் பெற்றுக்கொண்டு தனது பைக்கில் புரசைவாக்கத்தில் உள்ள நகைக்கடையில் பணியாற்றும் சகோதரனை பார்க்க சென்றார். பிறகு அங்குள்ள கனரா வங்கியில் நண்பரின் வங்கி கணக்கில் ரூ.70 ஆயிரத்தை செலுத்திவிட்டு வெளியே வந்தார். அப்போது ஜெபுனுல் ஆசாத் பைக் அருகே அடையாளம் தெரியாத 2 பேர் நின்றனர். பைக்கை எடுக்க முயன்ற போது, 2 பேரும் ‘நாங்கள் போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டு, ஹவாலா பணத்தை எடுத்து வந்துள்ளதாக கூறி ஜெபுனுல் ஆசாத் பையை ஆய்வு செய்த போது, அதில் ரூ.5.50 லட்சம் ரொக்கம் இருந்தது. உடனே 2 பேரும் ஜெபுனுல் ஆசாத்தை பைக்கில் ஏற்றி கொண்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி, புரசைவாக்கம் ராமா சாலையில் மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.5.50 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஜெபுனுல் ஆசாத் வெளியே சொல்லாமல் 2 நாள் கழித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து பணத்தை பறித்து தப்பி சென்ற மர்ம நபர்களின் பைக் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பை சேர்ந்த சார்லஸ் (36) என தெரியவந்தது. போலீசார் சார்லஸை பிடித்து விசாரணை நடத்திய போது, பொன்னேரி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் சார்லஸை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, சார்லஸ் தனியாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். அதில் ரூ.13 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பலரிடம் பணத்தை கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனை திரும்ப கட்ட முடியாமல் இருந்துள்ளார். அதேநேரம் சார்லஸ் காவலர் என்பதால் ‘ஹவாலா’ பணத்தை எடுத்து செல்லும் நபர்கள் குறித்து தகவல்கள் அவருக்கு தெரிந்துள்ளது. அதன்படி கடந்த 14ம் தேதி ஜெபுனுல் ஆசாத் ரூ.6 லட்சம் ஹவாலா பணத்தை எடுத்து வந்தது சார்லசுக்கு தெரியவந்தது. வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்றதால், தனது நண்பரான ராமகிருஷ்ணன் உதவியுடன் சம்பவத்தன்று ஹவாலா பணத்தை ஏடிஎம் மையத்தில் செலுத்த வந்த போது ஜெபுனுல் ஆசாத்தை மிரட்டி பணத்தை பறித்து சென்றதாக சார்லஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட காவலர் சார்லஸ் (36), அவரது நண்பர் ராமகிருஷ்ணன் (34) ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வழிப்பறி செய்தது ஹவாலா பணம் என்பதால் போலீசார் புகார் அளித்த ஜெபுனுல் ஆசாத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

20 − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi