Monday, September 30, 2024
Home » ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயில் நில மோசடி அரசு நில அளவையாளர் அதிரடி கைது

ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயில் நில மோசடி அரசு நில அளவையாளர் அதிரடி கைது

by Ranjith

 

காரைக்கால், செப். 30: காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தினை, பொலிவுறு நகர திட்டத்துக்காக சுற்றுலாத் துறைக்கும் வழங்குவதாக போலி அரசாணை சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் உரிய விசாரணை நடத்த வேண்டுமென இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நில மோசடியில் அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை தலையீடு இருப்பதால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மனிஷ் உத்தரவின் பேரில் விசாரணைகள் அனைத்தையும் சீனியர் எஸ்பி தலைமையிலான தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

மாவட்ட துணை ஆட்சியர் புகாரின் பேரில் சிவராமனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதன் தொடர்ச்சியாக நகர காவல் நிலைய போலீசார் காரைக்கால் சேர்ந்த என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் ஜேசிபி ஆனந்த் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஆனந்த் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வருவதாக போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் போலி ஆவணங்கள் தயார் செய்தது தொடர்பாக காரைக்கால் நகராட்சியில் பணிபுரியும் அரசு நில அளவையாளர் ரேணுகாதேவியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவ்வழக்கு தொடர்பாக என் ஆர் காங்கிரஸை சேர்ந்த ஆனந்த் மற்றும் நில அளவையர் ரேணுகாதேவியிடம் விலை உயர்ந்த இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ரேணுகா தேவியை காரைக்கால் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கோவில் நில மோசடியில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் முக்கிய புள்ளிகள் என 21 பேர் போலீசாரின் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

1 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi