திருவாடானை, அக். 4: திருவாடானை அருகே பனிச்சகுடி பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி பூச்சரம். இவர் அப்பகுதியில் ஆஸ்பெட்டாஸ் கொட்டகை அமைத்து செங்கல் சூளைக்கு கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.மேலும் அவரது ஆஸ்பெட்டாஸ் கொட்டகை வீட்டின் அருகில் அவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மூதாட்டி பூச்சரம் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்ற சமயத்தில் அவ்வழியாக சென்ற மர்ம நபர் யாரோ ஒருவர் அந்த வைக்கோல் படப்பில் தீ வைத்து விட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் அந்த வைக்கோல் படப்பில் திடீரென தீப்பிடித்ததால் அருகில் உள்ள ஆஸ்பெட்டாஸ் கொட்டகையிலும் தீப்பிடித்து மளமளவென பற்றி எரிந்துள்ளது. தகவலறிறந்து வந்த திருவாடானை தீயணைப்புத் துறையினர் எரிந்த தீயில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து மேலும் தீ பரவாமல் முழுவதுமாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக திருவாடானை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.