Friday, July 5, 2024
Home » வேலூர் மாவட்ட பேரூராட்சிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளை மறு ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவு-மாநகராட்சி, நகராட்சிகளில் கூடுதல் கண்காணிப்பு

வேலூர் மாவட்ட பேரூராட்சிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளை மறு ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவு-மாநகராட்சி, நகராட்சிகளில் கூடுதல் கண்காணிப்பு

by kannappan

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளை மறு ஆய்வு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படுவதாகவும் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய வரும் 4ம் தேதி கடைசி நாளாகும். வரும் 5ம்தேதி மனுகள் பரிசீலனை செய்யப்படுகிறது. 7ம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இதையொட்டி தேர்தலில் பணியாற்ற உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு கணினி மூலம் அந்தந்த கலெக்டர்கள் தலைமையில் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கிடையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு 3 கட்டங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நேற்று 7 இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி நடந்தது. அதன்படி, வேலூர் மாநகராட்சிக்கு டிகேஎம் கல்லூரி, குடியாத்தம் நகராட்சிக்கு திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி, பேரணாம்பட்டு நகராட்சிக்கு இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி, பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பென்னாத்தூர் பேரூராட்சிக்கு அடுக்கம்பாறை அரசு நடுநிலைப்பள்ளி, திருவலம் பேரூராட்சிக்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு மந்தைவெளி தொடக்கப்பள்ளி ஆகிய 7 இடங்களில் 2 ஆயிரத்து 331 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் வாக்குப்பெட்டி இயந்திரங்கள் கையாளும் முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.இந்நிலையில், வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடந்த முதற்கட்ட பயிற்சியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, 2 நகராட்சி, 4 பேரூராட்சிகள் உள்ளது. 180 வார்டுகளில் 5 லட்சத்து 93 ஆயிரத்து 64 பேர் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. பேரூராட்சிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் மறு ஆய்வு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வின்போது பதற்றமான வாக்குச்சாவடி இல்லாத நிலை ஏற்படும். மாநகராட்சி, நகராட்சிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமரா, வெப் கேமரா, கூடுதல் போலீசார் மூலம் கண்காணிப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது மாநகராட்சி தேர்தல் பார்வையாளர் அஜய்சீனிவாசன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், தாசில்தார் செந்தில், கட்டிட பொறியாளர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

You may also like

Leave a Comment

16 − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi