வேலூர், செப்.17: வேலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர், நர்சிடம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் அடுத்த கணியம்பாடியை சேர்ந்தவர் பாண்டியன்(44), கூலித்தொழிலாளி. இவரது உறவினர் உடல்நலன் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக பாண்டியன் கடந்த 14ம் தேதி மாலை மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் இருந்த டாக்டர் மற்றும் நர்சிடம், நோயாளிக்கு ஏன் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்து மிரட்டியதாக தெரிகிறது.
அதனை தடுக்க வந்த செக்யூரிட்டியையும் மிரட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்து அங்கு வந்த மருத்துவமனை புறக்காவல் நிலைய எஸ்எஸ்ஐ கலைமணி, பாண்டியனை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தார். அவரையும் பாண்டியன் மிரட்டினாராம். இதுகுறித்து மருத்துவ அலுவலர் இன்பராஜ் வேலூர் தாலுகா போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.