Saturday, September 21, 2024
Home » வேலூரில் பிரபல நகை கடையில் கொள்ளையடித்த சிங்க முகமூடி கொள்ளையன் கைது: சுடுகாட்டில் புதைத்து வைத்த 15.5 கிலோ நகைகள் மீட்பு

வேலூரில் பிரபல நகை கடையில் கொள்ளையடித்த சிங்க முகமூடி கொள்ளையன் கைது: சுடுகாட்டில் புதைத்து வைத்த 15.5 கிலோ நகைகள் மீட்பு

by kannappan

வேலூர்: வேலூரில் பிரபல நகைகடையில் கொள்ளையடித்த சிங்க முகமூடி கொள்ளையனை போலீசார் கைது செய்து, அவர் சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்த 15.50 கிலோ நகைகளை மீட்டனர். கொள்ைளயனுக்கு வெளிமாநில கொள்ளையர்களுடன் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 14ம் தேதி நள்ளிரவு சுவரில் துளையிட்டு புகுந்து 15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைரகற்கள் பதித்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இதற்கிடையே டிஐஜி பாபு உத்தரவின்பேரில், எஸ்பி ராஜேஷ்கண்ணன் தலைமையில், குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டது. ஐஜி சந்தோஷ்குமார் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டார்.மேலும் நகை கடையில் சிங்கமுகம் கொண்ட முகமூடி அணிந்து ஒரு வாலிபர் கேமராக்களுக்கு ஸ்பிரே அடித்த வீடியோ காட்சி வௌியிடப்பட்டது. மேலும் அப்பகுதியில் பதிவான 100க்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் சில சந்தேகத்திற்குரியவையாக இருந்தது.விசாரணையில், சிங்கமுகமூடி போட்ட கொள்ளையன், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையத்தை சேர்ந்த டீக்கா என்கிற டீக்காராமன் (28)தான் என தெரியவந்தது. நேற்று முன்தினம் முதல் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தப்பட்டது. மேலும், 15க்கும் ேமற்பட்ட நபர்களிடமும் விடிய, விடிய விசாரணை நடந்தது.இதையடுத்து வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியில் உள்ள உத்திரகாவேரி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் நகைகளை புதைத்து வைத்திருந்ததை டீக்காராமன் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து எஸ்பி ராஜேஷ்கண்ணன் தலைமையிலான போலீசார், அவரை கைது செய்து அந்த இடத்திற்கு அழைத்து சென்றனர். அந்த இடத்தில் நகைகளை ேதாண்டியெடுத்து மீட்டனர்.  டீக்காராமன், சீதாராமன் என்று பெயரை மாற்றி கூறி வாடகைக்கு வீடு எடுத்துள்ளார். இப்படி வேறு எங்கெல்லாம் நகை கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இவருடன் யார்? யார்? தொடர்பில் உள்ளனர். வெளிமாநில கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.  கொள்ளையடிக்கப்பட்ட ஒரு  வாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு, பதுக்கி  வைக்கப்பட்டிருந்த நகைகளை மீட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், வேலூர் நகை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட டீக்காராமன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒடுக்கத்தூர் ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு வீட்டை 5 ஆயிரம் வாடகை பேசி, 4 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தினர் வர உள்ளதாக கூறியுள்ளார்.  டீக்காராமன் தங்கியிருந்த வீட்டின் அருகே உத்திரகாவேரி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் 3 இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகை, 500 கிராம் வைர கற்கள் பதித்த நகைகளை புதைத்து வைத்துள்ளார். அவற்றை விற்பனை செய்ய யார், யாரிடம் பேசியுள்ளார் என்று விசாரித்து வருகிறோம். கைடீக்காராமன் மீது ஏற்கனவே பைக் திருடியதாக வழக்கு உள்ளது என்றனர். ‘கஞ்சா போதையில் தங்கையிடம் அத்துமீறியவர் ‘கொள்ளையன் டீக்காராமனின் தந்தை பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து விற்பனை செய்து குடும்பம் நடத்தி வந்தார். டீக்காராமனுக்கு ஒரு தங்கை உள்ளார். கஞ்சா போதையில் சொந்த தங்கையிடம் அத்துமீறி உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து டீக்காராமனின் தாய், தங்கை இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி தனியாக வசித்து வருகின்றனர்.’தங்கத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து திரிந்தார்’டீக்காராமன் கொள்ளையடித்த நகைகளை சொந்த ஊருக்கு கொண்டு சென்றுள்ளார். அவற்றில் இருந்து தங்கத்தால் ஆன ருத்ராட்ச மாலை மற்றும் ஒரு காப்பை அணிந்து கொண்டு ஊரில் சுற்றித்திரிந்துள்ளார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த அந்த ருத்ராட்ச மாலை மற்றும் காப்பு ஆகியவற்றில் கொள்ளையடிக்கப்பட்ட நகை கடையின் அடையாளம் இருந்தது. போலீசார் அதை போட்டோ எடுத்து அந்த நகை கடைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அந்த மாலை தங்களுடைய நிறுவனத்தில் பல மாதங்களாக விற்பனையாகாமல் இருந்ததும், தற்போது அந்த மாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்பிறகே டீக்காராமன் தான் கொள்ளையன் என்பதை போலீசார் உறுதி செய்தனர். ‘நடித்து காட்டிய கொள்ளையன்’கைதான கொள்ளையன் டீக்காராமனை நேற்று மாலை 6.45 மணியளவில் தோட்டப்பாளையத்தில் உள்ள நகைக்கடைக்கு எஸ்பி ராஜேஷ்கண்ணன் தலைமையிலான போலீசார் அழைத்து சென்றனர். வரும்போதே கொள்ளை சம்பவத்தின்போது பயன்படுத்திய சிங்க முகமூடியை அணிந்து கொண்டு வந்தார். அவரை உடனடியாக நகைக்கடையின் உள்ளே போலீசார் அழைத்து சென்றனர். அங்கு எப்படி கொள்ளையடித்தார் என்பது குறித்து செயல்முறையாக நடித்து காட்டினார். குறிப்பாக சுவரில் எப்படி துளையிட்டு, நகைகளை எப்படி கொள்ளையடித்துக் கொண்டு வெளியே சென்றார் என்பது குறித்து போலீசார் முன்னிலையில் செய்து காண்பித்தார். 15 நிமிடங்கள் வரை இந்த செயல்விளக்கத்தை அளித்தார். பின்னர் வெளியே வரும்போது மாஸ்க் அணிந்து கொண்டு சென்றார்.’பிடிபட்டது எப்படி? ‘வேலூர் நகை கடை கொள்ளை வழக்கில் சிங்க முகம் கொண்ட மாஸ்க் அணிந்தபடி நகை கடையில் உள்ள கேமராக்களுக்கு நகை கொள்ளையன் ஸ்பிரே அடிக்கும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவை பார்த்து, பள்ளிகொண்டா போலீசார் நகை கொள்ளையனின் அங்க அசைவுகளை வைத்து பார்த்தபோது கடந்த ஆகஸ்ட் மாதம் தனியார் பள்ளியில், மேஸ்திரி வேலைக்கு சென்றபோது, லேப்டாப் திருடிய நபரின் வீடியோ பதிவு சாயல் ஒத்து போனது. இதையடுத்து, அவரது செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது, செல்போன் சிக்னல் ஒடுகத்தூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஒடுகத்தூரில் சென்று, டீக்காராமனை பிடித்தனர். …

You may also like

Leave a Comment

five × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi