வேலூர், மார்ச் 9: வேலூரில் சதத்தை நெருங்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருமழை போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் ஏரிகள், குளங்கள் எல்லாம் வறண்டு உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மழை பெய்யவில்லை. இந்நிலையில் இந்தாண்டு மார்ச் மாதம் தொடக்கத்திலேயே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரிக்கு மேலாக கொளுத்தி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 98.8 டிகிரியாக பதிவாகியது. நேற்று சத்தை நெருங்கும் அளவுக்கு 99.7 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. மார்ச் மாதத்தின் தொடக்கமே 100 டிகிரியை வெயில் நெருங்கி உள்ளதால் வரும் நாட்களில் மேலும் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இப்போதே பொதுமக்கள் வெயிலை எப்படி சமாளிப்பது என்று கவலை அடைந்துள்ளனர்.