பெரம்பலூர்,செப்.5: பாலையூரில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பஞ்ச நதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தொண்டப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலையூரில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பஞ்ச நதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்தக்கோயில் பாழடைந்து சீரமைக்கப்படாமல் கிடப்பில் கிடந்தது. இந்த கோயிலை சீரமைத்துத்தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலையூர் கிராம பொதுமக்கள் வேறுஒரு இடத்தில் புதிய சிவன் கோயில் கட்ட முடிவு செய்து, அதன்படி வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோயில் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வந்த சிவனடியார்கள் பழமை வாய்ந்த பஞ்ச நதீஸ்வரர் கோயிலையும் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கூறினர். இதனை தொடர்ந்து பஞ்சநதீஸ்வரர் கோயில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி மகா கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்சகாவிய பூஜை, முதற்கால பூஜை, மகா தீபாராதனை, இரண்டாம் கால பூஜை, வேத பாராயணம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடை பெற்றது.
தொடர்ந்து விழா வின் முக்கிய நிகழ்வான புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு புனிதநீர் ஊற்றி மகா தீபாராதனை செய்தனர். நிகழ்ச்சியில் பாலையூர், தொண்டப்பாடி, வேப்பந்தட்டை, பாண்டகப் பாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் சாமி கும்பிட்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.