செங்கல்பட்டு: தமிழகத்தில் தொழிற்சாலைகள் வேடந்தாங்கலுக்கு வரும் வெளிநாட்டு பறவைகளை போல அரசு சலுகைகளை பெற்று லாபத்தை ஈட்டிய பிறகு ஆலைகளை மூடி செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைப்பகுதியில் இயங்கி வரும் ஃபோர்டு நிறுவனம், ஏப்ரல் மாதம் முதல் தன்னுடைய உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 25 ஆண்டுகளாக உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து சொகுசு கார்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரித்த நிறுவனங்களில் பணியாற்றும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 25 ஆண்டுகளாக நிலம், நீர், மின்சாரம் ஆகிய பல்வேறு சலுகைகளை ஃபோர்டு கார் நிறுவனம் தமிழக அரசிடம் இருந்து பெற்றிருக்கிறது. தற்போது அதிக நஷ்டம் ஏற்படுவதால் தொழிற்சாலையை மூடுவதாக அறிவிப்பு வெளியிட்டதை திரும்ப பெற வேண்டும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர். …