டெல்லி: ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய உயர்மட்ட குழு விரைகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த சிலருக்கு ஒமிக்ரான் தொற்று முதலில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மஹாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு பரவி உள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும் நாடு முழுவதும் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 415 ஆக அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த கோவிட் விதிமுறைகளை கடுமையாக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், 5 மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா, மேற்குவங்கம், மிசோரம், கர்நாடகா, பிகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களுக்கு ஒன்றிய குழு விரைகிறது. ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க ஒன்றிய உயர்மட்ட குழு வருகை தரவுள்ளதாகவும் அந்த குழுவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த தேவையான ஆலோசனைகளை ஒன்றிய குழு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …