Saturday, September 28, 2024
Home » வெவ்வேறு பகுதிகளில் விபத்து பெண் உள்பட 3 பேர் பலி

வெவ்வேறு பகுதிகளில் விபத்து பெண் உள்பட 3 பேர் பலி

by kannappan

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பம் தோப்பு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (38) நெசவு தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை சந்திரசேகர், சொரக்காய்பேட்டையில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது, அப்பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கை ரசிக்க சென்றார். ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதை கண்ட அவர், குளிக்க இறங்கினார். இதில் அவர், வெள்ளத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார். தகவலறிந்து பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, கொசஸ்தலை ஆற்றில் சுமார் ஒருமணி நேரம் தேடி, சந்திரசேகரை சடலமாக மீட்டனர். தொடர்ந்து பொதட்டூர்பேட்டை போலீசார், சடலத்தை கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.பூந்தமல்லி: சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் முன்னா (32). தனியார் நிறுவன ஊழியர். நேற்று அதிகாலையில் முன்னா, வேலை செய்யும் நிறுவனத்துக்கு பொருட்களை ஏற்றி வருவதற்காக வேனில் புறப்பட்டார். டிரைவர் ராஜாளி (22) வேனை ஓட்டி சென்றார். அவர்களுடன் சக ஊழியர்கள் சோட்டான் சகானி (35), சிம்பு சகானி (25), ஆகியோரும் இருந்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி அருகே வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரியின் மீது திடீரென மோதியது. இதில் வேனி முன்பகுதி முழுவதும் நொறுங்கி சேதமடைந்தது. அதில் பயணம் செய்த 4 பேரும் காயமடைந்தனர். இதை பார்த்த பொதுமக்கள், அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் செல்லும் வழியிலேயே முன்னா பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.புகாரின்படி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.சென்னை வில்லிவாக்கம், சிவன் கோயில், குளக்கரை தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (62), ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது தாய் கன்னியம்மாள் (78). நேற்று காலை தியாகராஜன், தாய் கன்னியம்மாளுடன், போரூரில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்றனர். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டனர். தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலை போரூர் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, அவ்வழியாக வேகமாக சென்ற தனியார் பஸ், பைக் மீது உரசிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த கன்னியம்மாள், சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ்சை தேடிவருகின்றனர்….

You may also like

Leave a Comment

5 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi