வீரவநல்லூர், மே 8: பிளஸ்2 பொதுத்தேர்வில் வெள்ளாங்குளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 50 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 61 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளும், 74 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளது. இதில் 4 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் வீரவநல்லூரை அடுத்த வெள்ளாங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 தேர்வு எழுதிய 48 மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சியை அளித்தனர். இந்த வெற்றியின் மூலம் சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற ஒரே அரசு மேல்நிலைப்பள்ளி என்ற பட்டத்தை வெள்ளாங்குளி அரசு மேல்நிலைப்பள்ளி வென்றுள்ளது. இதையொட்டி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முதல் 3 இடங்களை பிடித்த அருணாதேவி, வைஷ்ணவதேவி, பூர்விகா ஆகிய 3 மாணவிகளையும் பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.