திருவள்ளூர்: கனமழை காரணமாக பூண்டி ஒன்றியம் குன்னவளம் அடுத்த குப்பத்துப்பாளையத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் பெருக்கெடுத்து வயல்வெளியில் புகுந்தது. நேற்று முன்தினம் காஞ்சிப்பாடியை சேர்ந்த மணி மற்றும் அவரது மனைவி அமுலு ஆகியோர் விவசாய பணிக்காக குப்பத்துப்பாளையம் கிராமத்திற்கு சென்றனர். பணி முடித்த பிறகு வீட்டிற்கு செல்வதற்காக புறப்பட்டனர். ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் விவசாய தோட்டத்தில் இருந்த வீட்டிலேயே நேற்று முன்தினம் இரவு தங்கிவிட்டனர். இந்நிலையில், கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குப்பத்துபாளையத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் வெள்ளம் புகுந்தது. நேற்று மதியம் கணவன், மனைவி இருவரும் வீட்டிற்கு செல்வதற்காக புறப்பட்டனர். ஆனால் இடுப்பளவு தண்ணீர் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதனால் செய்வதறியாது தவித்தனர். பிறகு வயல்வெளி பகுதியிலிருந்த வீட்டின் மீது ஏறி நின்று கொண்டு வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் கயிறு மற்றும் லைப் ஜாக்கெட் கொண்டு சுமார் ஒரு மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்….