Tuesday, July 2, 2024
Home » வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்ய வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்ய வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!

by kannappan

சென்னை: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்ய  ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில்; தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8-9-2022) கடிதம் எழுதியுள்ளார். தீப்பெட்டி உற்பத்தித் தொழில், தமிழ்நாட்டின் தென்பகுதியில் வேலைவாய்ப்பிற்கான முக்கிய ஆதாரமாக விளங்குவதுடன், அப்பகுதியில் ஒரு பாரம்பரியத் தொழிலாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இத்தொழிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர் என்றும் அப்பணியாளர்களில் பெரும்பாலோர் பெண்கள் ஆவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், விவசாயம் செய்ய இயலாத வறண்ட பகுதியில் பொருளாதார வளர்ச்சியின் ஆதாரமாக இத்தொழில் விளங்குவதாகவும், தீப்பெட்டி ஏற்றுமதி மூலம் சுமார் ரூ.400 கோடி அந்நிய செலாவணி வருவாய் ஈட்டப்படுகிறது என்பதை மாண்புமிகு ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் அவர்களுக்கு இக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போது தொழில் துறை மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், ஏற்றுமதி சந்தையில் பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவில் இருந்து கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கோவிட் பெருந்தொற்றினைத் தொடர்ந்து ஏற்பட்ட விநியோக சங்கிலி இடையூறுகள், ஏற்றுமதி தொடர்புடைய செலவீனம் மற்றும் நடைமுறை சிரமங்கள் மேலும் அதிகரித்துள்ளதாகவும், உள்ளீட்டு செலவுகளும் பெருமளவு அதிகரித்துள்ளதையும் தனது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சீனா போன்ற நாடுகளில் இருந்து சட்டப்படியாகவும் சட்டவிரோதமாகவும் இறக்குமதி செய்யப்படும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் வரவால் தீப்பெட்டித் தொழிலின் உள்நாட்டு சந்தை வாய்ப்பு வேகமாக குறைந்து வருவதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்த சிகரெட் லைட்டர்கள் ரூ.10க்கு கிடைப்பது 20 தீப்பெட்டிகளுக்கு மாற்றாக இருக்கும். இருப்பினும் அவை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுவதுடன், அதில் பயன்படுத்தும் எரிபொருளின் சுகாதார தாக்கம் இன்னும் அறியப்படவில்லை என்றும், இவ்வெளிநாட்டு சிகரெட் லைட்டர்கள் தொடர்ந்து சந்தையைக் கைப்பற்றினால், தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டிலுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்று தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த விஷயத்தில் மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியை தடை செய்யுமாறும், சட்டவிரோத இறக்குமதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்….

You may also like

Leave a Comment

18 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi