Tuesday, September 17, 2024
Home » வெற்றிக் கோப்பைகளுடன் வீல்சேர் கூடைப்பந்து வீராங்கனைகள்

வெற்றிக் கோப்பைகளுடன் வீல்சேர் கூடைப்பந்து வீராங்கனைகள்

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் டாக்டர் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆறாவது வீல்சேர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்று இரண்டாவது இடத்தையும், ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்று மூன்றாவது இடத்தையும் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துஇருக்கிறது.இது குறித்து விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவரான மாலதியிடம் பேசியபோது, ‘‘பல கைகள் இணைந்துதான் எங்களின் இந்த வெற்றி. நாங்கள் இரண்டாவது இடம் வென்றது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது.ஊனமுற்றவர்கள் என்ற அடையாளத்தை மாற்றி, விளையாட்டு வீரர்கள் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறோம். உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் எங்களின் வெற்றியினை ஊடகங்கள் வெளிச்சமிட்டது மேலும் மகிழ்ச்சியாக இருந்தது. இதனால் பல மாற்றுத்திறனாளி நண்பர்களின் பார்வை எங்கள் மீதும் இந்த விளையாட்டின் மீதும் திரும்பி இருக்கிறது.வார இறுதி நாளான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஜெ.ஜெ. அவுட்டோர் ஸ்டேடியத்தில், காலை மற்றும் மாலை நேரத்தில் இரண்டு மணி நேரம் பயிற்சி எடுக்கிறோம். பல மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் பயிற்சிக்கு இங்கு வருகிறார்கள். நம் தமிழ்நாட்டில் மட்டும்தான் 150 பேர் வரை அதிகமான வீரர்கள் இருக்கிறோம்.ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மாநில, தேசிய போட்டிகள் மற்றும் கார்ப்பரேட் போட்டிகள் என வருடத்திற்கு 3 போட்டிகளில் நாங்கள் கலந்து கொள்கிறோம். திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்காக விளையாடும்போது எல்லா மாவட்டங்களில் இருந்தும் சிறந்த வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.பஞ்சாபில் விளையாட பெண்கள் பிரிவில் 10 பேர், ஆண்கள் பிரிவில் 10 பேர் என மொத்தம் 20 பேர் தேர்வாகிச் சென்றோம். இவர்களில் ஸ்பைனல்கார்டு இன்சூரிஸ், போலியோ அட்டாக் என பலரும் அடக்கம். பஞ்சாப் செல்ல நான்கு நாள் பயணம் என்பதால், தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவிகளைப் பெற்று எங்களுக்கான விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்தோம்.சென்னையில் இயங்கும் ஹெட்வே ஃபவுண்டேஷன் இந்துஸ்தான் கல்லூரியோடு இணைந்து எங்களுக்கு மிகப் பெரும் பக்க பலமாக இருந்தார்கள். பஞ்சாப் செல்வதற்கு முன்பு தொடர்ந்து எட்டு வாரமும் பயிற்சி எடுக்க தங்குமிடம், உணவு போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.விளையாட்டு வீரர்களின் அத்தனை தேவைகளையும் உடனிருந்து பூர்த்தி செய்து கொடுத்ததோடு, எங்களுக்கான ஸ்பான்சர்களையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.மேலும் எங்களுக்கு உதவியாக பஞ்சாப் வரை இரண்டு தன்னார்வலர்களை உடன் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் பஞ்சாப் கிளம்பிய அன்று மாலை வீரர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்பாடு செய்து, எங்களைப் பாராட்டி வழி அனுப்பி வைத்தார்கள். சில தனியார் நிறுவனங்கள் போக்குவரத்து ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.போட்டியில் பங்கேற்க பஞ்சாப் கிளம்புவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் எங்களுக்கான கஸ்டமைஸ்ட் வீல்சேர்கள் கைகளுக்கு கிடைத்தது. சரியான பயிற்சி இன்றி, புது வீல்சேரில் விளையாடியதால் அதன் வேகத்திற்கு ஈடு கொடுப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஒரு மாதத்திற்கு முன்பே புது வீல்சேரில் பயிற்சி எடுத்திருந்ததால் முதல் இடம் கிடைக்க வாய்ப்பு அதிகம் இருந்தது. மாநிலப் போட்டியில் 23 மாநிலங்கள் களத்தில் இருந்தன. இதில் தமிழ்நாட்டில்தான் 20 சர்வதேச வீரர்கள் உள்ளனர்.பல மாவட்டங்களில் இருந்து வார இறுதி நாட்களில் பயிற்சி எடுக்கசென்னை வரும் எங்கள் விளையாட்டுவீரர்கள் இன்டோர் ஸ்டேடியம், தங்குமிடம், உணவு போன்றவற்றிற்கு ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள்.கடன்பெற்று வந்துதான் பயிற்சி எடுக்கிறார்கள். இனி இந்த நிலை தொடரக்கூடாது. அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்க இருக்கிறோம். திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் நடிகர் கமலஹாசனையும் சந்தித்து எங்கள் பிரச்சனைகள் குறித்துப் பேசி இருக்கிறோம். சரியான வழிமுறைகள் இருந்தால் எங்களாலும் சாதிக்க முடியும். விரைவில் தமிழக முதல்வரையும் சந்திக்க இருக்கிறோம்’’ என முடித்தார்.பிரகாஷ், வீல்சேர் கூடைப்பந்து போட்டியாளர்‘‘மற்ற விளையாட்டுக்களைவிட கூடைப்பந்து போட்டியில்தான் 45 நிமிடமும் உடலுக்குத் தேவையான அசைவுகள் முழுமையாகக் கிடைக்கிறது. இதனால் உடல் மற்றும் மனதளவில் மிகப்பெரும் மாற்றம் வருகிறது. மாற்றுத்திறனாளிகளான எங்களுக்கு பயிற்சி எடுக்க மைதானத்திற்கு அருகிலேயே தங்கும் இடம், உணவு ஏற்பாடு செய்து கொடுத்தால் உதவியாக இருக்கும்.மேலும் பயிற்சிக்கு இன்டோர் ஸ்டேடியம் கிடைத்தால் நல்லது. நாங்கள் அவுட்டோரில் பயிற்சி எடுப்பதால் வீல்சேர்கள் சேதம் அடைகிறது. வீல்சேருக்கான உதிரி பாகங்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. தமிழக அரசு எங்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைச் செய்து கொடுத்து உதவினால், அடுத்து நடைபெற உள்ள சர்வதேசப் போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் உள்ளது’’ என்றார்.ராகவி, ஹெட்வே ஃபவுண்டேஷன் ‘‘எங்கள் அமைப்பின் நோக்கங்களில் ஒன்று விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பது. கிரிக்கெட், பேஸ்கெட்பால் இரண்டையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். வீல்சேர் பேஸ்கெட்பால் வீரர்களுக்கான உதவியை நாங்கள் ரொம்பவே ஆத்மார்த்தமாக செய்தோம். வீரர்களைப் பொறுத்தவரை அவர்களின் உடனடித் தேவை, தரமான கஸ்டமைஸ்டு ஸ்போர்ட்ஸ் வீல்சேர்கள். வெளிநாட்டில் மட்டுமே இவை தயாரிக்கப்படுவதால் விலை ரொம்பவே அதிகம்.எனவே எங்கள் ஹெட்வே ஃபவுண்டேஷன் இந்துஸ்தான் கல்லூரியோடு இணைந்து 6 லட்சம் ரூபாய்க்கான தொகையை ஏற்பாடு செய்து நடிகர் கமலஹாசன் மூலமாக அதை அவர்களுக்கு வழங்கினோம். போட்டிக்கான நாள் நெருங்கிய நிலையில், பல மாவட்டங்களில் இருந்து வரும் வீரர், வீராங்கனைகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கான உணவு, தங்குமிடத்தை தொடர்ந்து 8 வாரங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தோம்.அவர்கள் வசதிக்கு ஏற்ப ரேம்ப், லிப்ட் வசதி இருக்கிற தங்குமிடங்களாக ஏற்பாடு செய்தோம். இறுதி நாளில் அவர்களை மேலும் ஊக்கப்படுத்த, வழியனுப்பும் நிகழ்ச்சியும் ஏற்பாடானது. அவர்களுக்கு உதவிய ஸ்பான்ஸர்கள், தன்னார்வலர்கள், சப்போர்ட்டர்களையும் அன்று வரவழைத்து அவர்களைப் பெருமைப்படுத்தியதோடு, வீரர்களுக்குத் தேவையான டி-சர்ட், மேலே அணியும் ஜெர்கின் மாடல் ஜாக்கெட், மெடிக்கல் கிட் போன்றவற்றை வழங்கி அவர்களுக்கான உதவியாளர்களையும் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தோம்’’  என்றார்.மகேஸ்வரிகோவை ப்ரீத்தி

You may also like

Leave a Comment

fifteen + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi