மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் (55). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு, சொந்தமாக 50 செம்மறி ஆடுகள் இருந்தன. நேற்று முன்தினம் காலை காத்தவராயன், வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். மீண்டும் மாலையில் வீடு திரும்பியதும் கொட்டகையில் அடைத்தார். நேற்று காலையில் கொட்டகைக்கு சென்று பார்த்தபோது, ஆட்டுபட்டியில் இருந்த 12 ஆடுகள், 8 குட்டிகள் என 20 ஆடுகள் இறந்துகிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உடனே அவர், பட்டியை திறந்தபோது, அதில் இருந்து ரத்த கோலத்தில் வெறிபிடித்த நாய் ஒன்று ஓடியது. இதனால், வெறிநாய் கடித்து, ஆடுகள் பலியானது தெரிந்தது. இறந்த ஆடுகளின் மதிப்பு ₹1 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.இதுதொடர்பாக, மதுராந்தகம் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்….