வெப்ப நிலையால் அதிகரித்து வரும் மின்தேவையை பூர்த்தி செய்ய அதிக நிலக்கரி உற்பத்திக்கு நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் பிரலாத் ஜோஷி தகவல்

சென்னை: என்எல்சி இண்டியா லிமிடெட் நிறுவனத்தில் (நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்) சுரங்க பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2040ம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மின் உற்பத்தி, சுமார் 3000 பில்லியன் யூனிட்டுகளாக இருக்கும் அதே வேளையில், இந்தியாவின் எரிசக்தி தேவை இரு மடங்காக இருக்கும். இந்த தேவையை பூர்த்தி செய்ய 2040க்குள் அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி தேவை, சுமார் 1500 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும். நமது நிலையான சுரங்க இலக்குகளை மனதில் கொள்ள வேண்டிய நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றியும், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியை  சார்ந்திருப்பதை மரபுசாரா எரிசக்தி மூலங்களின் வளர்ச்சியுடன் சமநிலைப்படுத்த முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். கடந்த 8 ஆண்டுகளில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின், மின் உற்பத்தித் திறன் 2740 மெகாவாட்டிலிருந்து 6061 மெகாவாட்டாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. சுரங்கத்தின் திறன் ஆண்டிற்கு 30.60 மில்லியன் டன்னிலிருந்து (MTPA) 50.60 மில்லியன் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் என்எல்சிஐஎல், பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் பழுப்பு நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி என்பதிலிருந்து நிலக்கரி சுரங்கம் மற்றும் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி மற்றும் மரபுசாரா மின் உற்பத்தி (அதாவது, சூரிய ஒளி, காற்றாலை மற்றும் கட்டிடங்களின் மேற்பகுதியில் அமைக்கப்பட்ட சூரிய ஒளி மூலம் மின்னுற்பத்தி உள்பட) என்கிற பல்வகை மேம்பட்ட நிலையை அடைந்தது. சுரங்கம்  மற்றும் மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமாகவும் பரிணமித்துள்ளது. என்எல்சிஐஎல், உற்பத்தித் திறனில் 45 சதவீதத்திற்கும் மேலான, அனல் மின்சக்தி மற்றும் அதன் முழு மரபுசாரா மின்சக்தி உற்பத்தியை தமிழகத்திற்கு வழங்கி வருகிறது. இந்தியாவில் 1-ஜிகாவாட் திறனுடைய, சூரிய மின் நிலையத்தை நிறுவிய முதல் ஒன்றிய பொதுத்துறை நிறுவனம் என்கிற பெருமையை, என்எல்சி இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகளாவிய பெருந்தொற்றுநோயிலிருந்து நாடு மீண்டிருந்தாலும், கோவிட்-19ஐ எதிர்த்து போராடுவதில் என்எல்சி இந்தியா நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்காற்றியது. இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி