ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வெங்காடு ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு வெங்காடு, இரும்பேடு, கருணாகரச்சேரி, மேட்டு கொளத்தூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை ஒட்டி ஸ்ரீபாலியம்மன் கோயில் குளம் உள்ளது. இதில், பள்ளி மாணவர்கள் விளையாடும்போது, தவறி விழுந்து உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளது என பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். இதையடுத்து, அப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், அப்பள்ளி வளாகத்தில் ₹24 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணி நேற்று முதல் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, ஊராட்சி செயலர் தணிகாசலம் உள்பட பலர் உடனிருந்தனர்….