ஊத்துக்கோட்டை: வெங்கல் பகுதியில் ₹2 லட்சம் மதிப்புடைய 150 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து வியாபாரியை கைது செய்தனர். பெரியபாளையம் அருகே வெங்கல் பகுதியில் வசித்து வருபவர் ஏகாம்பரம் (50). இவர், இப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், மாம்பள்ளம் கிராமத்தில் ஏகாம்பரத்திற்கு சொந்தமாக 2 கடைகள் உள்ளது. இந்த கடைகள் பூட்டியே கிடக்கிறது. இந்த பூட்டிய கடையில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக வெங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று திடீரென சோதனை நடத்தினர். அப்போது, 150 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர். மேலும், குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததற்காக மளிகை வியாபாரி ஏகாம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்தி திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், பறிமுதல் செய்த குட்காவின் மதிப்பு ₹ 2 லட்சம் என கூறப்படுகிறது….