கரூர், ஜூன் 18: பாதுகாப்பு இன்றி காணப்படும் வெங்கமேடு நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என மாணவ, மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு அருகே நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். அதிகளவு மாணவர்கள் பயின்று வரும் இந்த பள்ளியின் ஒரு பகுதியில் பக்கவாட்டு சுற்றுச்சுவர் இன்றி உள்ளது.
இதனால், விஷ ஜந்துக்கள் பள்ளி வளாகத்திற்குள் புகும் நிலை உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் எனவும் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி வெங்கமேடு நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.