சிவகங்கை, ஜூலை 5: நில உரிமையாளர்கள் நிலங்களை அளவீடு செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், < https://tamilnilam.tn.gov.in/citizen > என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. இச்சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்த நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண் வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் ஆகியவற்றை மனுதாரர் < https://eservices.tn.gov.in > என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.