வீட்டு பூட்டை உடைத்து நகை, வெள்ளி கொள்ளை

சேலம், ஜன.8: சேலத்தில் தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து 4 பவுன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் தாதகாப்பட்டி அம்பாள்ஏரிரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (35), தொழிலாளி. இவர் கடந்த 5ம் தேதி இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு, மனைவி மணிமேகலையுடன் உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம், மணிமேகலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவை உடைத்து, அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த ₹60 ஆயிரம்
மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது. இதுபற்றி அன்னதானப்பட்டி போலீசில் மணிமேகலை புகார் செய்தார். எஸ்ஐ வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

அதில், வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், நள்ளிரவு நேரத்தில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. தடயவியல் நிபுணர்களை வரவழைத்து, கொள்ளையர்களின் கைரேகை மற்றும் இதர தடயங்களை போலீசார் சேகரித்தனர். இக்கொள்ளையில் 2 அல்லது 3 பேர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்