Tuesday, September 17, 2024
Home » வீட்டு தோட்டம் அமைப்பவர்கள் இயற்கை உரம் பயன்படுத்தினால் சத்தான காய்கறிகளை பெற முடியும்-கற்பகநாதர்குளத்தில் மாடித்தோட்டம் செயல்விளக்கம்

வீட்டு தோட்டம் அமைப்பவர்கள் இயற்கை உரம் பயன்படுத்தினால் சத்தான காய்கறிகளை பெற முடியும்-கற்பகநாதர்குளத்தில் மாடித்தோட்டம் செயல்விளக்கம்

by kannappan

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை வட்டாரம் கற்பகநாதர்குளம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் தோட்டக்கலை பயிர், வீட்டு தோட்டம் மாடித் தோட்டம் செயல் விளக்கம் செய்யப்பட்டது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் மூலம் தோட்டக்கலை பயிர் வீட்டு தோட்டம் மாடித்தோட்டம் செயல்விளக்கம் நடைபெற்றது.இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் சத்தியமூர்த்தி ஆகியோரின் தலைமையில் பயனாளி பக்கிரிசாமியின் வீட்டுத்தோட்டம் மாடி தோட்டம் அமைப்பதற்கு பிற விவசாயிகளைக் கொண்டு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் வீட்டுத் தோட்டம் மாடித்தோட்டம் குறித்து வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் கூறுகையில், வீட்டில் தோட்டம் வைப்பவர்கள் இயற்கையான உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சத்தான காய்கறிகளை பெற முடியும். தோட்டக்கலை பயிரான காய்கறிகள், கீரை வகைகள், பழ வகைகள், மருத்துவ குணம் வாய்ந்த செடிகள் போன்ற எண்ணற்ற பயிர்கள் பயிரிடலாம். இதில் நாம் கிராமபுறங்களிலும் நகர்ப்புறங்களில் மண்வளத்திற்கு ஏற்றார்போல் சாதாரண இடங்களை கொண்டும், வீட்டின் மொட்டை மாடியிலும் இயற்கையான உரமான, வீட்டில் கிடைக்கும் காய்கறி கழிவுகள், முட்டை ஓடுகள், போன்றவைகளும் உரங்களே. இதுதவிர ஆட்டு சாணம், சாம்பல், மாட்டு சாணம், மண்புழு உரம் போன்ற உரங்களை பயன்படுத்தலாம். வீட்டில் தோட்டம் அமைப்பதற்கு ஜூன், ஜூலை மாதங்கள்தான் விதைகள் நட சரியான காலம் சில செடிகளை அக்டோபர் மாதத்திலும் நடலாம் புதிதாக தோட்டம் அமைப்பவர்கள், மானிய விலையில் அரசு கொடுக்கும் தோட்ட பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். வீட்டின் மொட்டை மாடிப்பகுதியிலும், சாதாரண முறையில் வீட்டின் தரைப்பகுதி பக்கத்தில் இடத்திற்கு தகுந்தார்போல் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யலாம். மேலும் தோட்டம் அமைப்பதற்கு பாலித்தீன் கவர், பழைய குடங்கள், மினரல் வாட்டர் கேன்கள், வாளிகள் மண் தொட்டி ஆகியவைகளை கொண்டு மண்புழுஉரம், தென்னைநார் கழிவு, மணல் 2:2:1 என்ற விகிதத்தில் தொட்டிகளை நிரப்பி இரண்டு அல்லது மூன்று விதைகளை இட்டு ஒரே வகையான செடிகளை விதைக்காமல் பல ரகங்களைக் கொண்டு விதைக்கவும், நீர் நிர்வாகம் செய்து நன்கு வெயில் படும்படியும், காய்ந்த இலைகள், பூச்சி தாக்குதலுக்கு உள்ளான இலைகளையும், செடிகளில் இருந்து உடனே பறித்து விட வேண்டும். அதையும் மக்க வைத்து உரங்களாக பயன்படுத்தலாம் என்றும் மிக எளிய முறையில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம் என்றும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். மேலும் அட்மா திட்டங்கள் குறித்து விவசாயிகள் கூறுகையில், வீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம் தொழில்நுட்ப செயல் விளக்கத்தின்போது இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்றும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முத்துப்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு அட்மா திட்ட தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் கற்பகநாதர்குளம் கிராம விவசாயிகள் கூறினர்….

You may also like

Leave a Comment

18 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi